அலங்காரத் தாவரங்களை கடத்திய நபர் கைது.!
தாய்லாந்தில் இருந்து சுமார் 02 இலட்சம் ரூபா பெறுமதியான அலங்காரத் தாவரங்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கண்டியைச் சேர்ந்த 56 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் பாங்கொக் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான UL-405 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.
இவர் தான் கொண்டு வந்த பயணப் பொதிக்குள் காகிதங்களால் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 02 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலங்காரத் தாவரத் தொகுதியை எடுத்து வந்துள்ளார்.
இத்தாவரங்களை இலங்கைக்குள் கொண்டு வருவதற்குத் தேவையான முறையான இறக்குமதி அனுமதிப்பத்திரம் அல்லது தாவர சுகாதார பாதுகாப்பு சான்றிதழ்கள் எதனையும் அவர் பெற்றிருக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்கொள்ளப்பட்ட முறையான சுங்க விசாரணைகளின் பின்னர், குறித்த தாவரத் தொகுதி சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
அத்துடன், இத்தாவரங்கள் மூலம் நாட்டுக்குள் ஏற்படக்கூடிய உயிரியல் ரீதியான பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக, அவற்றை அழிப்பதற்கென கட்டுநாயக்க தாவர தனிமைப்படுத்தல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.