இந்திய மீனவர்கள் 10 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை – அபராதத்துடன் விடுதலை.!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள், 10 வருட சிறைத் தண்டனை 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அபராதத்துடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 19 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்கள், மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று (26) மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த 10 பேருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், ஒவ்வொருவருக்கும் தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.மேலும், வழக்குடன் தொடர்புடைய சான்றுப் பொருட்களை அரசுடமையாக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.