நாட்டில் 16 இலட்சம் பேர் சுகாதார சேவைகளை பெறுவதில் தடை! வெளியான தகவல்.!
இலங்கை தேசிய வைத்தியசாலையின் தேசிய வலிப்பு நோய் மைய அரங்கில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்ட பிரதிசுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி, இயலாமையுடைய நபர்களை மருத்துவக் கண்ணோட்டத்தோடு மட்டுமின்றி சமூக மற்றும் மனித உரிமைக் கண்ணோட்டத்திலும் பார்வையிடுவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அவர், இலங்கையில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும், இயலாமையுடைய நபர்கள் இன்னும் பௌதீக, தகவல் தொடர்பு மற்றும் மனப்பான்மை தடைகளை எதிர்கொள்வதாக குறிப்பிட்டார்.
இதனைத் தீர்க்க அரசாங்கம் தேவையான கொள்கை மாற்றங்களை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளதாகவும், சுகாதாரத் தகவல்களை பல வடிவங்களில் வழங்க அவசியம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதியமைச்சர், பாரம்பரிய மருத்துவக் கண்ணோட்டத்தை கடந்து, சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் சுகாதார சேவையை வழங்குவதற்காக பணியாளர்களை முறையாக உணர்வூட்டுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் சர்வதேச தேர்தல் முறைமைகள் ஆதரவுடன் நிகழ்ந்த இச்செயலமர்வு, நாட்டில் 16 இலட்சத்திற்கும் மேற்பட்ட இயலாமையுடைய நபர்களின் சுகாதார சேவை உரிமையை முன்னெடுக்கும்விதமாக அமைந்தது.