“தீவிர அரசியலில் இனி ஈடுபடமாட்டேன் – ரணில் விக்கிரமசிங்க.!
தீவிரமான அரசியலில் இனிமேல் தாம் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.நேற்று கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்கர்களை வணங்கி அவர்களின் ஆசிகளை அவர் பெற்றார்.
இந்த விஜயத்தின் போது, அவர் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய திப்போட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்தார். பின்னர் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரைச் சந்தித்தார்.
இந்தக் கூட்டத்தின் போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து மகாநாயக்க தேரர்களுடன் விக்கிரமசிங்க கலந்துரையாடினார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கலந்துரையாடல்களுக்குப் பிறகு, அரசியல் விடயங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி கேட்க முயன்றபோது, அவர்களின் கேள்விகளுக்குச் சுருக்கமாகப் பதிலளித்து, தான் இனி தீவிர அரசியலில் ஈடுபடவில்லை என்று கூறினார் ரணில் விக்கிரமசிங்க.