கிவுல் ஓயா திட்டம் வெளிப்படைத்தன்மையற்றது – தமிழரசுக் கட்சி கடும் எதிர்ப்பு.!
2011 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம் இன்றுவரை வெளிப்படைத்தன்மையின்றி, மிக இரகசியமாக முன்னெடுக்கப்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், இந்தத் திட்டம் தொடர்பான தீர்மானங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட மக்களுடன் ஆலோசனை இன்றியே மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.கிவுல் ஓயா திட்டம் நடைமுறைக்கு வந்தால், வவுனியா வடக்கில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக கிராமங்கள், நீர்ப்பாசனக் குளங்கள், விவசாய நிலங்கள், தொல்லியல் இடங்கள் மற்றும் வனப்பகுதிகள் மூழ்கி அழியும் அபாயம் உள்ளதாக இருவரும் எச்சரித்தனர்.
மேலும், இந்தத் திட்டம் தமிழர்களின் இனப்பரம்பல் அமைப்பை மாற்றியமைக்கும் முயற்சியாகவும், சுற்றுச்சூழல் பாதிப்புகள், வனஜீவராசி அழிவு, மனித–யானை மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.இதனிடையே, திட்டப் பிரதேச மக்களுடன் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் தெளிவூட்டல் கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும், புதிய குடியேற்றவாசிகள் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படமாட்டார்கள் என்றும் அமைச்சரவை தரப்பு உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.