மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் கையெழுத்து வேட்டை.!
மன்னாரில் இருந்து முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இளவன் குளம் ஊடாக புத்தளத்திற்கு செல்லும் பிரதான வீதியை திறக்க கோரி ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (23) காலை முதல் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.
மன்னாரில் இருந்து இளவன் குளம் ஊடாக புத்தளத்திற்கான பிரதான வீதியை திறப்பதற்கான ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் குறித்த கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
மன்னாரில் இருந்து இளவன் குளம் ஊடாக புத்தளத்திற்கு செல்கின்ற பிரதான வீதியை திறந்து மக்களின் பாவனைக்காக விடுவிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து குறித்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மதத் தலைவர்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டதோடு, குறித்த வீதியை திறக்கும் நிலையில் மன்னார் மாவட்ட மக்கள் மாத்திரம் இன்றி வடக்கு மக்களும் பலன் அடைவார்கள் என தெரிவித்தனர்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் இருந்து மீனவர்கள் மாத்திரம் இன்றி அனைவரும் தென் பகுதிக்கான போக்குவரத்தை இலகுவாக மேற்கொண்டு தமது வாழ்வாதார பிரச்சினைகளுக்கு இலகுவான தீர்வை பெற்றுக் கொள்வார்கள் என தெரிவித்தனர்.
மன்னார் மாவட்ட மக்களிடம் பெற்றுக் கொள்ளப்படும் குறித்த கையெழுத்துக்கள் மகஜராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அனுப்பி வைக்கப்படும் என ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
குறித்த நிகழ்வில் மத தலைவர்கள், மீனவ அமைப்புகள், பொது அமைப்புகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு கையெழுத்துக்களை இட்டு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





