இளையோர் உலகக் கிண்ணம்: இலங்கை நாளை களத்தில்.!
சிம்பாப்வேயில் நேற்று (15) ஆரம்பமான 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் இலங்கை இளையோர் அணி நாளை (17) தனது முதல் போட்டியில் ஜப்பான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. வின்டெக்கில் நடைபெறும் இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும்.
16 அணிகளுடன் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் இலங்கை இளையோர் அணி ஆரம்ப சுற்றில் ஏ குழுவில் இடம்பெற்றிருப்பதோடு இந்தக் குழுவில் ஜப்பானுடன் அவுஸ்திரேலியா, அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.
விமத் தின்சர தலைமையிலான இலங்கை இளையோர் அணி 2025 இளையோர் ஆசிய கிண்ணத்தில் அறையிறுதி வரை முன்னேறி அதில் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தது. எனினும் அந்தப் போட்டியில் பெற்ற அனுபவத்துடனேயே உலகக் கிண்ணத்தில் பங்கேற்றுள்ளது. உலகக் கிண்ணத்திற்கு முன்னர் நடைபெற்ற இரு பயிற்சிப் போட்டிகளிலும் வெற்றியீட்டிய உற்சாத்துடனேயே இலங்கை அணி நாளை, முதல் போட்டியில் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெறும் ஆரம்ப சுற்றில் போட்டியிடுவதோடு ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் சுப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் ஆறு அணிகள் கொண்ட இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும்.இளையோர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி பெப்ரவரி 6 ஆம் திகதி ஹராரேவில் நடைபெறவுள்ளது