திருகோணமலைக்கும் யாழிற்கும் இடையில் கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை – சூறாவளியாக மாறுமா..!
நாட்டில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஒரு சூறாவளியாக மாறும் என்று எந்த கணிப்பும் இல்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர என தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (09.01.2026) கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திருகோணமலை பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஆபத்து மண்டலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை (10) மாலை வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (09) மாலை 4 மணிக்கு விடுத்துள்ள எதிர்வரும் 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பிற்கு அமைய வட மாகாணத்தின் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கிழக்கு திசையில் சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது. நாட்டின் வடக்கு பகுதியில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.