கொட்டகலையில் குடியிருப்பு பகுதியில் தீப்பரவல்.!
பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஆகீல் தனியார் தோட்டத்தில் இன்று காலை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஒரு குடியிருப்பு முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், அருகில் இருந்த மேலும் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்த திம்புள்ள பத்தனை பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்த போதிலும் ஒரு வீடு முழுமையாக எரிந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் உயிர்சேதங்களோ காயங்களோ எதுவும் ஏற்படவில்லை.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.
சம்பவம் குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.



