தொடர் தோல்வியை தவிர்க்க இலங்கை இன்று பலப்பரீட்சை.!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் எதிரணிக்கு எந்த சவாலும் கொடுக்காது தோல்வியை சந்தித்த இலங்கை அணி தொடர் தோல்வியை தவிர்க்க இன்று (09) முதல் போட்டி நடைபெற்ற அதே ரங்கிரி தம்புள்ளை மைதானத்தி;ல் களமிறங்கவுள்ளது.
டி20 உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கும் மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த டி20 தொடரில் நேற்று முன்தினம் (07) நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி துடுப்பாட்டம், பந்து வீச்சு என அனைத்து துறைகளிலும் சோபிக்க தவறியது.முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 19.2 ஓவர்களில் 128 ஓட்டங்களுக்கே சுருண்டது.
\ நீண்ட இடைவெளிக்குப் பின் அணிக்கு திரும்பிய தனஞ்சய டி சில்வா 10 பந்துகளுக்கு முகம்கொடுத்து 10 ஓட்டங்களையே பெற்றார். மீண்டும் ஒருமுறை சோபிக்கத் தவறிய சரித் அசலங்க 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஜனித் லியனகே 31 பந்துகளில் பெற்ற 40 ஓட்டங்களுமே அதிகபட்சமாக இருந்தது.இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த பாகிஸ்தான் அணி 16.4 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்ட வெற்றி இலக்கை இலகுவாக எட்டியது. ஆரம்ப வீரர் ஷஹிப் சதா பர்ஹான் 36 பந்துகளில் 51 ஓட்டங்களை பெற்றார்.
டி20 உலகக் கிண்ணத்திற்கான இறுதி அணியை தேர்வு செய்வதில் இந்தத் தொடரில் வீரர்களின் ஆட்டம் முக்கியமாக அவதானிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய போட்டிக்கு இலங்கை அணி யில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று நம்பப்படுகிறது.
இலங்கை அணி சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டிகளில் தடுமாறி வருவதோடு இதுவரை ஆடிய ஏழு போட்டிகளில் இலங்கையால் 2 ஆட்டங்களையே வெல்ல முடிந்துள்ளது. பாகிஸ்தான் அணி தனது முன்னணி வீரர்கள் பலரும் இல்லாத நிலையிலும் அதனால் இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியுமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.