கடைசி ஆஷஸிலும் ஆஸி. அணி வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலும் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலிய அணி தொடரை 4–1 என கைப்பற்றியது. இதன்மூலம் 2018 தொடக்கம் அவுஸ்திரேலிய அணி ஆஷஸ் கிண்ணத்தை தொடர்ந்து நான்காவது முறையாகவும் தக்கவைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 5ஆவது ஆஷஸ் போட்டியின் இறுதி நாளான நேற்று (08) அவுஸ்திரேலிய அணிக்கு 160 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்ப வரிசை விக்கெட்டுகள் முக்கிய இடைவெளிகளில் பறிபோனபோதும் அந்த இலகுவான இலக்கை 31.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸி. அணியால் எட்ட முடிந்தது.
முன்னதாக நாணய சுழற்சியில் வென்று முதலில் துப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸுக்காக 384 ஓட்டங்களை பெற்றதோடு தொடர்ந்து ஆடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 567 ஓட்டங்களைப் பெற்று 183 ஓட்டங்களால் முன்னிலையை எட்டியது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 342 ஓட்டங்களையே பெற்றது.