ஐ.தே.க. – ஐ.ம.ச. கூட்டணி உருவானால் தலைமைப் பதவியை சஜித் ஏற்பதில் பிரச்சினையில்லை.!
“ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்த பின்னர் கூட்டணியின் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாஸ ஏற்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேர்தலில் இட ஒதுக்கீடுகளை மேற்கொள்ளலாம்.
முகாமைத்துவ குழுவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். இரு தரப்பில் இருந்தும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இரு தரப்பினரும் ஏற்கக்கூடிய ஒருவர் பொதுச்செயலாளர் பதவிக்கு வரவேண்டும்.
கூட்டணியின் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்குவதில் பிரச்சினை கிடையாது. ஏனெனில் அவர்களுக்குதான் ஆதரவு தளம் அதிகமாக உள்ளது. இந்த உண்மையை ஏற்க வேண்டும்.
கூட்டணியின் தலைவராக சஜித்தும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவும் செயற்பட வேண்டும். கட்சி ஆதரவாளர்களின் மனநிலையை ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது புரிந்துகொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் எமக்குப் பயணிக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்தால் வெற்றியை நோக்கிப் பயணிக்க முடியும்.” – என்றார்.