மட்டக்களப்பு – கொழும்புக்கான பொதுப் போக்குவரத்துச் சேவையை மேற்கொள்ள அனுமதி.!
மட்டக்களப்பு – கொழும்புக்கான பொது போக்குவரத்துச் சேவையொன்றை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு மாநகர சபையினால் போக்குவரத்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியிடம் விடுக்கப்பட்ட வழிப் போக்குவரத்திற்கான அனுமதியை அமைச்சர் எழுத்து மூலம் வழங்கியுள்ளதாகவும் அதற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் இன்றைய தினம் மாநகர சபைக்கு அறிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் அமர்வு இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.
மாநகர சபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக சபை நடவடிக்கைகள் ஆரம்பமான நிலையில் இன்றைய சபை அமர்வில் பிரதி முதல்வர் மு.தினேஸ்குமார், ஆணையாளர் என்.தனஞ்செயன், கணக்காளர், மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து கடந்தகால கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்ட முன்மொழிவுகள் மற்றும் மாநகர சபையின் அனுமதியைப் பெறுவதற்கான கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இன்றைய சபை அமர்வின்போது மாநகர சபையில் நடைபெற்ற நிதிக் கொடுக்கல் வாங்கல் குறித்து சபையில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன் சபையின் நடைமுறைகளையும் மாநகர சபையின் நடைமுறைகளையும் மீறிய வகையில் கொடுக்கல் வாங்கல் நடைபெற்றதாக பல்வேறு உறுப்பினர்களினாலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இது தொடர்பில் சபை நிறுத்தப்பட்டு கணக்காளரின் கருத்துகள் பெறப்பட்ட நிலையில் மீண்டும் சபை நடவடிக்கைகள் ஆரம்பமான நிலையில் பல்வேறு கருத்துகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.
இதேபோன்று மட்டக்களப்பு மாநகர சபைக்கு வருமானம் ஈட்டும் வகையிலும் மக்களின் நன்மை கருதியும் மட்டக்களப்பு – கொழுப்புக்கான போக்குவரத்துச் சேவையொன்றை நடாத்துவதற்கு வழி அனுமதியை கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வரினால் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி வேண்டுகோள் ஒன்று முன்வைக்கப்பட்டதாகவும் அந்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான அனுமதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாக இங்கு மாநகர முதல்வரினால் அறிவிக்கப்பட்டது. அதற்கு மாநகர சபை முதல்வரினால் அமைச்சருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில் இன்றைய தினம் சபை நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன.



