சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு.!
புத்தளம் – வென்னப்புவ, மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்கள் இன்று காலை (06) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் சடலங்கள் வைக்கல பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இருவர் மாரவில ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
சட்டவிரோத மதுபானம் அருந்தியமையாலேயே இவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.
இந்தச் சட்டவிரோத மதுபான விநியோகம் அல்லது விற்பனையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.