மஹர சிறைச்சாலையின் முன்னாள் களஞ்சியக் காப்பாளர் உட்பட இருவர் தடுத்து வைத்து விசாரணை.!
சிறைச்சாலையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரால் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வந்த போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மஹர சிறைச்சாலையின் முன்னாள் களஞ்சியக் காப்பாளர் உட்பட இருவரையும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பியகம காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க, சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி அளித்தார்.பியகம காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி அஜித் விஜேசிங்கவின் ஆலோசனையின் பேரில், குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவரிடமே தற்போது தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி,முன்னாள் களஞ்சியக் காப்பாளரிடமிருந்து 2 கிராம் 250 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டது.மற்றயவரிடமிருந்து 51 கிராம் 130 மில்லி கிராம் ‘ஐஸ்’ மற்றும் 51 கிராம் 650 மில்லி கிராம் ‘ஹெரோயின்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் இருந்துகொண்டு இந்த போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வரும் நபர் குறித்தும், இவர்களுக்கிடையிலான தொடர்பு குறித்தும் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்தத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.பியகம காவல்துறை நிலையத்தின் உப காவல்துறை பரிசோதகர்கள் மற்றும் சார்ஜன்ட்கள் அடங்கிய குழுவினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.