விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு.!
இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, மாரவில – திசேராபுரவிலிருந்து அடப்பர சந்தி நோக்கிச் சென்ற உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி ஒரு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் உந்துருளி ஓட்டுநர் மற்றும் பின்னால் இருந்தவர் காயமடைந்து, மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் மாரவில பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞராவார்.
பெலவத்த – ஹொரவல வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீகஹதென்னவிலிருந்து பெலவத்த நோக்கிச் சென்ற சைக்கிள், எதிர்த் திசையில் வந்த உந்துருளி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் உந்துருளி ஓட்டுநர் மற்றும் சைக்கிளோட்டி ஆகியோர் பலத்த காயமடைந்து மீகஹதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் மத்தேகம மீகஹதென்ன பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய வயோதிபராவார்.
ஹொரணை – கெஸ்பேவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹொரணையிலிருந்து கெஸ்பேவ நோக்கிச் சென்ற கப் ரக வாகனம், வீதியைக் கடக்கும் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த பெண் பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பொல்கஸ்ஸோவிட்ட பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய குடும்பப் பெண்ணாவார்.
பேருவளை புனித அன்னாள் வீதி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பேருவளை பெரேரா மாவத்தை திசையில் இருந்து பயணித்த உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுவரில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உந்துருளி ஓட்டுநர் காயமடைந்து பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பேருவளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞராவார்.
நொச்சியாகம – தல்கஸ்வெவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நொச்சியாகம நோக்கிச் சென்ற உந்துருளி, எதிர்த் திசையில் வந்த உந்துருளி மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் உந்துருளி ஓட்டுநர்கள் இருவரும் காயமடைந்து நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய குடும்பஸ்தராவார்.