பெண் உறுப்பினர்களுக்கு கூடுதல் கழிப்பறை வசதிகளை கோரிய மனுவுக்கு ஆதரவளித்த ஜப்பானிய பிரதமர்!
ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சானே தகாயிச்சி (Sanae Takaichi), அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களுக்காகக் கூடுதல் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தக் கோரி சுமார் 60 பெண் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் இணைந்து மனு அளித்துள்ளார்.2024 ஒக்டோபரில் நடந்த தேர்தலில், ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் இதுவரை இல்லாத அளவில் சாதனை அளவாக 73 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இருப்பினும், நாடாளுமன்றக் கட்டடத்தில் பெண் உறுப்பினர்களுக்கான வசதிகள் இன்னும் பழைய நிலையிலேயே இருப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள வசதிகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் யசுக்கோ கோமியாமா கூறுகையில், “முக்கியக் கூட்டத் தொடர்கள் தொடங்குவதற்கு முன்னால் பெண் கழிப்பறைகளின் முன் நீண்ட வரிசையில் உறுப்பினர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.இதனால் பல பெண் உறுப்பினர்கள் கழிப்பறைக்குச் செல்வதையே தவிர்த்து விடுகின்றனர்,” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் பிரதான சபை அருகே பெண் உறுப்பினர்களுக்காக இரண்டு அறைகள் கொண்ட ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது.ஒட்டுமொத்தக் கட்டடத்திலும் பெண்களுக்கு 22 கழிப்பறைகளே உள்ள நிலையில், ஆண்களுக்கு 67 கழிப்பறை வசதிகள் உள்ளன. 1936 ஆம் ஆண்டு ஜப்பான் நாடாளுமன்றக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டபோது பெண்களுக்கு வாக்குரிமையே வழங்கப்படவில்லை.
1945 லேயே பெண்களுக்கு அங்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. அரசாங்கம் உண்மையிலேயே பெண்களின் அதிகாரத்தை மேம்படுத்த நினைத்தால், இந்த அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க ஒத்துழைக்க வேண்டும்” என்று பெண் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஜப்பான் பிரதமராகப் பொறுப்பேற்ற போது, அமைச்சரவையில் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்துவதாகக் கூறிய சானே தகாயிச்சி, தற்போது இந்தப் போராட்டத்திலும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.