முள்ளியவளை குஞ்சுக்குளத்தின் வாய்க்கால் பாதிப்பு; நேரடியாக நிலமைகளை ஆராய்ந்தார் ரவிகரன் எம்.பி
வெள்ள அனர்த்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு – முள்ளியவளை வடக்கு குஞ்சுக்குளத்தின் வாய்க்காலின் பாதிப்பு நிலமைகளை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 01.01.2026நேற்று நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தார்.
குறிப்பாக ஏற்கனவே குஞ்சுக்குளத்தின் வாய்க்கால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தநிலையில் சீரமைப்புப்பணிகள் கடந்தாண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் தற்போது அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த சீரமைப்புப் பணிகளும் கடந்த வெள்ள அனர்த்தத்தினால் மிக மோசமாகப் பாதிப்படைந்து காணப்படுகின்றன.
இதனால் குறித்த வாய்க்காலின் அருகிலுள்ள குடியிருப்புக்காணிகளும் மண்ணரிப்பு பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளன.
இந்நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள், உரியவகையில் முன்னெடுக்கப்படாமை மற்றும் முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினாலுமே இவ்வாறு பாதிப்புநிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் முறையிட்டனர்.
இந்நிலையில் நிலமைகளை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பாதிப்புநிலைமையைச் சீர்செய்வதுதொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.
