டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்.!
டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க.செந்தில்குமார் தெரிவித்தார்.
புதிய ஆண்டில் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் நடைபெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச சபையில் புதிய ஆண்டில் மக்கள் பணிகளை ஆரம்பிக்கும் வகையிலான கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பிரதேச சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் 2025.12.30 ஆம் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக இன்று பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் தங்களது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதன்போது தேசியக்கொடி மற்றும் பிரதேச சபை கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

