2016 ஹட்டன் நகர அபிவிருத்தித் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த கோரிக்கை
2016ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட 500 மில்லியன் ரூபா பெறுமதியான ஹட்டன் நகர அபிவிருத்தித் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு, புதிய தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான முரளி ரகுநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஹட்டன் நகரில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக 2016ஆம் ஆண்டு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இதுவரை குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என முரளி ரகுநாதன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஹட்டன் நகர பேருந்து நிலையம், அதனைச் சுற்றியுள்ள வீதிகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசரத் தேவை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல ஆண்டுகளாக இப்பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதால் ஹட்டன் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்த்திருந்த மக்களிடையே தற்போது ஏமாற்றமும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விடயத்தை ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் கவனத்தில் கொண்டு, எவ்வித தாமதமுமின்றி ஹட்டன் நகர அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என முரளி ரகுநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஹட்டன் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி இவ்விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுப்பார் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.