மட்டக்களப்பில் சோக சம்பவம்: வாளி நீரில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளிக்குள் தவறி விழுந்து இரண்டு வயது குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான நந்தகோபன் கிசோத் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த துயரச் சம்பவம் இன்று காலை சுமார் 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுவன் வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளியின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது எதிர்பாராத விதமாக சிறுவன் தலைகீழாக வாளிக்குள் விழுந்து, அதிலிருந்த நீரில் மூழ்கியுள்ளார். இதனால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
சிறுவன் நீரில் மூழ்கியிருப்பதை அவதானித்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன் பழுகாமம் வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், சிறுவனின் உறவினர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சிறுவனின் சடலம் இன்று மாலை 6.00 மணியளவில் பழுகாமம் வைத்தியசாலையிலிருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சிறுவனின் திடீர் உயிரிழப்பு கற்சேனை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

