பலகை தொழிற்சாலை அமைக்கும் முயற்சி தொழிலாளர்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்.! .
கொட்டகலை ரொப்கில் தோட்டப் பகுதியில் மரப்பலகை ஆலை ஒன்றை அமைப்பதற்காக தோட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ரொப்கில் தோட்ட நுழைவாயில் பகுதியில் குறித்த பலகை ஆலையை அமைப்பதற்கான அடித்தளத்தை நிர்மாணிக்கும் நோக்கில், அப்பகுதியில் காணப்பட்ட தேயிலைச் செடிகளை அகற்றும் நடவடிக்கையை தோட்ட நிர்வாகம் இன்று முன்னெடுக்க முற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்ப்பால் முயற்சி நிறுத்தப்பட்டது.
மர ஆலை அமைக்கப்பட உள்ள காணி மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் அவர்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு அக் காணியில் வீடமைப்பு திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் அப்போது தோட்ட நிர்வாகமும் எம்.பி.ஆரோ நிறுவனம் இணைந்து தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்தது.
மாறாக காலங்கள் கடந்த நிலையில் தற்போது அத் தோட்ட நிர்வாகம் அதே காணியில் மர ஆலை அமைக்க நடவடிக்கை எடுத்து அப் பகுதியில் உள்ள தேயிலை செடிகளை அகற்ற முயன்ற நிலையில் அத் தோட்டத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து அந்த மர ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


