பிள்ளையான் உட்பட மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்.!
கடந்த 2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு பகுதியில் ‘ரி-56’ (T-56) ரகத் துப்பாக்கியால் சுட்டு 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட மூவரின் விளக்கமறியலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி வரை நீடித்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு – கல்லடி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை, காத்தான்குடியில் டி.எம்.வி.பி (TMVP) கட்சியின் உறுப்பினர் உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை ஆகிய 5 தொடர் கொலைச் சம்பவங்கள் தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஏற்கனவே 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரை 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) முறைப்படி கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய பிள்ளையான், இராணுவ புலனாய்வுத் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் மற்றும் தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகம்மது பாய்ஸ் ஆகிய 4 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கடந்த 2026ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை (01) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான், முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகிய மூவரும் சிறைச்சாலையிலிருந்து இணையவழி (Zoom) காணொளி ஊடாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட பதில் நீதவான், வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.
அதேவேளை, இவ்வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவரான லண்டனில் தலைமறைவாக உள்ள ‘முகம்மது பாய்ஸ்’ என்பவருக்கு எதிரான திறந்த பிடிவிறாந்தையும் (Open Warrant) நீதிமன்றம் தொடர்ந்தும் புதுப்பித்து கட்டளையிட்டுள்ளது.
