திருக்கோவில் பிரதேசத்தில் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக்கூட்டம்
அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக்கூட்டம் நேற்று (21) திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, தற்போது அரச காணிகளைப் பயன்படுத்தி வருகின்ற பல்வேறு அரச நிறுவனங்களுக்கு, சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களின் இணக்கப்பாட்டுடன் குறித்த காணிகளை வழங்குதல் மற்றும் அவற்றுக்குத் தேவையான காணி ஆவணங்களை வழங்குதல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், திருக்கோவில் பிரதேச சபை கௌரவ தவிசாளர் எஸ்.சசிகுமார் அவர்களினால் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்காக கோரப்பட்டுள்ள காணி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. குறித்த காணியை வழங்குவது தொடர்பான சிபாரிசை, தொல்பொருள் திணைக்களத்தின் பரிசீலனைக்குப் பின்னர் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தை அமைப்பதற்கு பொருத்தமான காணியை ஒதுக்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு, அதற்கான சிபாரிசு முன்வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த திருக்கோவில் பிரதேச சபை கௌரவ தவிசாளர் எஸ்.சசிகுமார், பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அதிகாரிகள் துறைசார் வரையறைகளுக்குள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு, துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதேச செயலாளர் த.கஜேந்திரன், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைவாக, பொதுமக்களின் தேவைகளை கருத்திற்கொண்டு அரச அதிகாரிகள் துரிதமாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபை கௌரவ தவிசாளர் எஸ்.சசிகுமார் உள்ளிட்ட அம்பாறை மாவட்ட நகர அபிவிருத்தி அதிகார சபை, மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழு, திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகம், நீர்ப்பாசனத் திணைக்களம், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர முகாமைத்துவ திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனபரிபாலனத் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும், அம்பாறை மாவட்ட நில அளவை அலுவலக சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர், பிராந்திய தொல்பொருள் அலுவலக உதவிப் பணிப்பாளர், தம்பிலுவில் கமநல சேவைகள் மத்திய நிலைய உத்தியோகத்தர், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பிராந்திய முகாமையாளர், திருக்கோவில் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
திருக்கோவில் பிரதேசத்தில் காணிப் பயன்பாட்டை முறையாகத் திட்டமிடுதல், அரச மற்றும் பொது தேவைகளுக்கான காணிகளை ஒதுக்கீடு செய்தல், பல்வேறு அரச நிறுவனங்களின் காணித் தேவைகளை நிறைவேற்றுதல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களை சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் ஒருங்கிணைந்து ஆராயும் வகையில் இக்கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.








