யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை விரைவுபடுத்துமாறு சாணக்கியன் சபையில் முழக்கம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் யானை – மனித மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படுவதில் நிலவும் தாமதங்கள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்றைய வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை – மனித மோதல்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதற்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து சுற்றாடல் அமைச்சரிடம் அவர் விளக்கங்களைக் கோரியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்:-
“மட்டக்களப்பு மாவட்டத்தில் 96 கிலோமீற்றர் நீளமான யானை வேலி அமைப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது. இதற்காக அரசாங்கத்திற்கு நன்றி கூறுகின்றேன்.
இருப்பினும், நிதி ஒதுக்கப்பட்டும் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதில் நிலவும் தாமதங்களால், இதுவரை வேலி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.
குறிப்பாக, யானை – மனித மோதல்களால் அதிகம் பாதிக்கப்படும் போரைத்தீவு பிரதேச செயலகப் பிரிவின் எந்தவொரு பகுதியும் இந்த 96 கிலோமீற்றர் திட்டத்திற்குள் உள்வாங்கப்படாமை குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளேன்.” – என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வனஜீவராசிகள் திணைக்களத்தின் உப பிரிவுகள் அமைத்தல் மற்றும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் குறித்த விடயங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“கடந்த ஆண்டு அமைச்சர் கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்தபோது, வனஜீவராசிகள் திணைக்களத்திற்காக 5 புதிய உப அலுவலகங்கள் உருவாக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது போதியளவு உப பிரிவுகள் இருப்பதாகப் பதிலளிக்கப்படுகிறது. வாக்குறுதியளிக்கப்பட்ட அந்த 5 அலுவலகங்களின் தற்போதைய நிலை என்ன? வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளணிப் பற்றாக்குறைக்கு தீர்வு காண எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை?” என்றும் அவர் வினவியுள்ளார்.
அத்துடன், புதிதாக வழங்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் அதிகாரியிடம் வினவியபோது, அது தொடர்பான தெளிவான தகவல் இல்லை எனக் கூறியதையும் அவர் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.
“மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் வெறும் காகிதத்தோடு நின்றுவிடக் கூடாது. அவை செயற்திட்டங்களாக மாற்றப்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டம் இப் பிரச்சினையினால் அதிகம் பாதிக்கப்படுவதால், யானை வேலி அமைத்தல், புதிய அலுவலகங்களை உருவாக்குதல் மற்றும் ஆளணிப் பற்றாக்குறையைத் தீர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் எப்போது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதை அமைச்சர் தெளிவாகத் தெளிவுபடுத்த வேண்டும்.” – என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.