யாழில் எட்டு விபத்துக்களை ஏற்படுத்திய பிரதான வீதி – வீதி அபிவிருத்தி அதிகாரசபை மௌனம்!
யாழில் சேதமடைந்த வீதி ஒன்றில் எட்டு விபத்துகள் இடம்பெற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையானது இதுவரை நடவடிக்கை எடுக்காத விடயம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
782 வழித்தட யாழ் – காரைநகர் வீதியானது மானிப்பாய் – எழுமுள்ளி பகுதியில் சேதமடைந்துள்ளது. வீதியின் முழு அகலமும் சுமார் 15 அடிகள் நீளத்திற்கு சேதமடைந்துள்ளது.
வீதியில் நிலத்தின் கீழுள்ள குடிநீர் வழங்கல் குழாயானது சேதமடைந்ததால் தண்ணீர் வீதியை பிரித்துக்கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாய்ந்தது. இந்நிலையில் அந்த தண்ணீர் குழாயானது சீர் செய்யப்பட்டது இருப்பினும் அந்த வீதியானது சீர் செய்யப்பட்டாமல் காப்பெற் உடைந்த நிலையிலேயே காணப்படுகிறது.
குறித்த வீதியால் மூன்று வழித்தடங்களில் பயணிக்கும் பேருந்துகள் பயணிக்கின்றன அத்துடன் தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் அந்த வீதியை பயன்படுத்துகின்றனர்.
அத்துடன் அந்த இடத்தில் இதுவரை எட்டு விபத்துகள் ஏற்பட்டதாகவும், அந்த எட்டு விபத்துக்களில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உட்பட பலர் காயமடைந்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீதியாக காணப்படுகிறது. அந்த வீதியானது திருத்தம் செய்யப்படாமல் தொடர்ச்சியாக இவ்வாறே காணப்பட்டால் மரணங்கள் கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு இடம்பெறும் உயிரிழப்புகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையே பொறுப்பு கூறவேண்டிய தேவை காணப்படுகிறது.
எனவே மேலும் விபத்துகள் அல்லது அசம்பாவிதங்கள் எவையும் ஏற்பட முன்னர் அந்த வீதியை சீர் செய்ய வேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாக உள்ளது.










