நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது.!
தனமல்வில பகுதியில் கஞ்சா தோட்டம் ஒன்றை முற்றுகையிட்டு, கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 05 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் மொனராகலை கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொனராகலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் புத்தல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட், தெஹியத்தகண்டியவைச் சேர்ந்த 45 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட், பிபிலையைச் சேர்ந்த 39 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி மற்றும் பிபிலையைச் சேர்ந்த 36 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோராவர்.
தனமல்வில, நிக்கவெவ தெமோதர குளத்திற்கு அருகில் கஞ்சா தோட்டம் ஒன்று இயங்கி வருவதாகத் தனமல்வில தலைமையக பொலிஸ் பரிசோதகருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, கடந்த 11 ஆம் திகதி அப்பகுதியில் பொலிஸாரால் விசேட முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுச் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனைகளின் போது குறித்த சந்தேகநபருக்குச் சொந்தமான மேலும் மூன்று கஞ்சா தோட்டங்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.
இதன்போது, மற்றுமொரு கஞ்சா தோட்டம் அழிக்கப்பட்டு எரிக்கப்பட்டிருந்ததை அவதானித்த பொலிஸார், அது குறித்துச் சந்தேகநபரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
10 ஆம் திகதி மொனராகலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஆறு அதிகாரிகள் வந்து இந்த தோட்டத்தை முற்றுகையிட்டதாகவும், தமக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகத் தம்மிடம் 5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அத்துடன், அங்கிருந்த ஐந்து கஞ்சா தோட்டங்களில் ஒன்றை மட்டும் தீயிட்டு அழித்துவிட்டு, ஏனைய கஞ்சாத் தொகையை அந்த அதிகாரிகளே எடுத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நிக்கவெவ பகுதியைச் சேர்ந்த ‘களு’ எனப்படும் மற்றொரு நபரும் கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மொனராகலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஆறு அதிகாரிகள் வந்து கஞ்சா தொகையை உலர்த்துமாறு தன்னிடம் ஒப்படைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் உத்தரவு பெற்றனர்.
தொடர் விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், தனமல்வில பொலிஸாரால் குறித்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.