சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இருவர் கைது.!
நாட்டின் இருவேறு பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளின் போது, சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடா கைப்பற்றப்பட்டதுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (14) பெம்முல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகமுவ பகுதியில் பெம்முல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 67 லீற்றரும் 500 மில்லிலீற்றரும் (90 போத்தல்கள்) கொண்ட சட்டவிரோத மதுபானம் மற்றும் 1,060 லீற்றர் (06 பீப்பாய்கள்) கோடா ஆகியவற்றுடன் 37 வயதுடைய போகமுவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, வீரக்கெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்புக்குமுல்ல பகுதியிலும் பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 67 லீற்றரும் 500 மில்லிலீற்றரும் (90 போத்தல்கள்) கொண்ட சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபான உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் 1,160 லீற்றர் (07 பீப்பாய்கள்) கோடா என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஹகுருவெல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபர்கள் தொடர்பான தொடர் விசாரணைகளும் மேலதிக சோதனை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.