இராணுவத்தினரின் வசமுள்ள மக்களின் காணிகள் மக்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும்! – கஜேந்திரன் எம்பி வலியுறுத்தல்
பருத்தித்துறை அஞ்சல் அலுவலகம் நிரந்தர காணி மற்றும் கட்டடம் இராணுவ வசமுள்ள நிலையில் அஞ்சல் அலுவலகம் தற்காலிக இடந்தில் இயங்கி வருவது தொடர்பில் ஆராயும் நோக்கோடு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது தற்காலிகமாக இயங்கி வரும் அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று உரிய காணி தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்தின் நிரந்தர காணியை நேரில் சென்று பார்வையிட்டார். அஞ்சல் அலுவலக அலுவலர்கள் உரித்தான காணியை பாராளுமன்ற உறுப்பினருக்கு காண்பித்தனர்.
இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
இராணுவத்தின் வசமுள்ள மக்களின் காணிகள் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
பலாலி விஸ்தரிப்பு என்று கூறிக் கொண்டு பலாலி விமான நிலையத்தில் இரண்டாம் கட்டம் இந்திய அரசின் நிதியில் நிர்மாணிக்க வேண்டிய ஓடு பாதை முதல் நிர்மாணப் பணிகளையே அரசு இன்னும் தொடங்கத் தயாராக இல்லை.
இந்திய அரசு நிதியை வழங்கத் தயாராக இருந்தும் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளை அரசு முன்னெடுக்காத வரை மக்கள் தமது காணிகளை விமான நிலைய விஸ்தரிப்பிற்கு வழங்கக்கூடாது எனத் தெரிவித்தார்.