உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நவீன மயப்படுத்தப்படும் சாட்டிக் கடற்கரை!
சாட்டிக் கடற்கரையை அபிவிருத்தி செய்து, பாதுகாப்பான சுற்றுலாத் தலமாக மாற்றி உல்லாசப் பயணிகளின் ஈர்ப்பை அதிகரிக்கும் நோக்கிலான செயற்றிட்டத்தின் கீழ், கடற்கரையின் நுழைவாயில் மற்றும் சுற்றுவேலி அமைக்கும் பணிகள் இன்று (14) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில், சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் இன்று (14) பிற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
சாட்டிக் கடற்கரையின் வீதிப் பகுதியிலிருந்து கடற்கரைப் பகுதிக்கான அணுகலை கட்டுப்படுத்தும் வகையில் கம்பி வலை அமைத்தல், நுழைவாயில் அமைத்தல் மற்றும் சாலையோரப் படிகளை நீடித்தல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.
உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தை நிறைவேற்று நிறுவனமாகக் கொண்டு, வேலணை பிரதேச சபையினால் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் ஊடாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
சுமார் 73 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் இந்த அபிவிருத்தித் திட்டப் பணிகள் எதிர்வரும் கார்த்திகை மாதத்திற்குள் முழுமையாக நிறைவுசெய்யப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபை தெரிவித்துள்ளது.
சாட்டிக் கடற்கரையின் பாதுகாப்பு மற்றும் அழகை மேம்படுத்துவதுடன், எதிர்காலத்தில் அப்பகுதியை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கும் இந்தத் திட்டம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.







