இஸ்ரேல் தொழில்வாய்ப்புக்கு மலையக இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.!
இஸ்ரேலில் உணவகங்கள் மற்றும் புனரமைப்புத் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற விரும்பும் இலங்கைத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பங்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் (SLBFE) கோரப்பட்டுள்ளதால் இந்த வாய்ப்பினை பெருந்தோட்ட பகுதி இளைஞர்களும் உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச்செயலாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ,
தகுதியான விண்ணப்பதாரர்கள் www.slbfe.lk என்ற பணியகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் ஊடாக இணையவழியில் பதிவு செய்யலாம்.
உணவகத் துறைக்கான வேலைவாய்ப்பு
உணவகத் துறைக்காக மொத்தம் 4,000 விண்ணப்பதாரர்களுக்கு பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தகுதிகள்:
25 முதல் 40 வயது வரை உள்ள ஆண்கள்.
உணவக சமையலறையில் குறைந்தது ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 8 வருட பாடசாலைக் கல்வி பெற்றிருக்க வேண்டும்.
நல்ல ஆங்கில அறிவு இருக்க வேண்டும்.
உடல் மற்றும் மன ரீதியாக பணிக்குத் தகுதியானவராக இருக்க வேண்டும்.
முன்னர் இஸ்ரேலில் பணியாற்றியிருக்கக் கூடாது.
இஸ்ரேலில் பணிபுரியும் நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவர் இருக்கக்கூடாது.
புனரமைப்புத் துறைக்கான வேலைவாய்ப்பு
புனரமைப்புத் துறைக்காக மொத்தம் 12,000 விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது பின்வரும் நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது:
- பிளாஸ்டரிங் மற்றும் ஜிப்சம் போர்டு வேலைகள் – 3,000 பேர்
- மின்சார பெட்டி பொருத்துதல் மற்றும் பிளொக் சுவர் கட்டுமானம் – 3,000 பேர்
- தச்சுத் தொழில் – 3,000 பேர்
- செராமிக் டைல்ஸ் பொருத்துதல் – 3,000 பேர்
கட்டுமானத் தொழில்களுக்கான இறுதித் தேர்வில் முன்னர் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது. எனினும், இஸ்ரேலின் வேறு வேலைவாய்ப்புப் பிரிவுகளுக்கு முன்னர் விண்ணப்பித்தவர்கள் இந்த நான்கு பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு நடவடிக்கைகள் தகுதி பெற்ற இஸ்ரேலிய பிரதிநிதிகளால் நடத்தப்படும். விண்ணப்பதாரர்களின் தொழில்துறை திறன்கள் மற்றும் அனுபவங்கள் பரிசோதிக்கப்படும்.
வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் தங்களுக்கு உண்மையான அனுபவமும் தகுதியும் உள்ள துறைகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) கேட்டுக்கொண்டுள்ளது என்றார்.