நுவரெலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு.!
கடந்த வாரம் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 10 வட்டாரங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 164 குடும்பங்களுக்கு சுமார் 5000/= பெறுமதியான பொருட்கள் அடங்கிய பொதிகள் இன்று 13 ஆம் திகதி வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு இன்று மதியம் 3.மணிக்கு மஸ்கெலியா பி.எம்.டி.கலாச்சார மண்டபத்தில் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் கண்டி இந்திய உதவி தூதரக அதிகாரிகளான திரு.யோகேஸ்வரன் மற்றும் திரு.தினேஷ்குமார் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
மேலும், மஸ்கெலியா பிரதேச சபையின் உதவி தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் மற்றும் வட்டார உறுப்பினர்கள், மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ராஜவீரன் உட்பட மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஷ்பகுமார, மஸ்கெலியா கிராம உத்தியோகத்தர் திரு.குணதிலக்க, முன்னாள் அம்பகமு பிரதேச சபையின் தவிசாளர் கணபதி நகுலேஸ்வரன் அடங்கலாக பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த வாரம் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட 10 வட்டாரங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 164 பயனாளிகளுக்கு மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் அவர்களினால் கண்டி இந்திய உதவி தூதரக உதவி தூதுவர் திருமதி அதிமேதகு சரண்யா எஸ்.கே.அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து இந்த நிவாரணப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.


