போதைப்பொருளுடன் சிக்கிய பாடசாலை மாணவன்.!
பதுளை – லுணுகலை பகுதியில் 5,600 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 16 வயதுடைய பாடசாலை மாணவனொருவன் லுணுகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
லுணுகலை – 27 கட்டை, அலகொலகம பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன், லுணுகலை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகின்றார்.
குறித்த மாணவன் முச்சக்கர வண்டியொன்றில் இருந்து இறங்கி, லுணுகலை பாக்குத் தோட்டம் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவரை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது மாணவனிடமிருந்து 5,600 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட மாணவனின் தந்தை கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவனை இன்று பசறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.