போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை; இறுதி தீர்மானம் இல்லை.!
போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடனான குற்றச்செயல்கள் குறித்து கலந்துரையாடும் போது மரண தண்டனை தொடர்பில் ஒரு தரப்பினால் யோசனை முன்வைக்கப்பட்டது. இருப்பினும் அது குறித்து இறுதி தீர்மானமோ இணக்கப்பாடோ எடுக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களின் பிரச்சினைகள் பற்றி பேசும் போது இவ்வாறான பல யோசனைகள் முன்வைக்கப்படும். இருப்பினும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.
நீர்கொழும்பு, மஹர, கொழும்பு மெகசின், குருவிட்ட மற்றும் பள்ளஞ்சேன ஆகிய சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணைகள் பல கோணங்கள் முன்னெடுக்கப்படுகிறது. இந்த மோதலை போன்று இனிவரும் காலங்களில் பல சம்பவங்கள் இடம்பெறும் என்று குறிப்பிட்ட தரப்பினரது கருத்துக்களும் அவதானிக்கப்பட்டு, அது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கைதிகள் உள்ளடங்களாக 1500 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான விசாரணைகளில் 61 பேர் குற்றவாளிகளாக பெயரிப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் மற்றும் உயிரிழப்புக்கள் குறித்து நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு இடம்பெறவுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் நேற்று (நேற்று முன்தினம்) கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பில் 925 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு மெகசின், குருவிட்ட மற்றும் பள்ளஞ்சேன ஆகிய சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த மோதலுக்குரிய காரணிகள் பல கண்டறியப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.