யானைகளின் நடமாட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ட்ரோன் இயக்கிய சந்தேகநபர் கைது.!
வடமேற்கு வனஜீவராசி வலயத்திற்குட்பட்ட கல்கமுவ – கசிகோட்ட பிரதான வீதியில் அமைந்துள்ள யானைகள் நடமாடும் பாதையில், யானைகளின் நடமாட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ட்ரோன் கமராவை இயக்கிய சந்தேகநபர் ஒருவர் வனஜீவராசிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மற்றும் வழக்கு சான்றுகளான ட்ரோன் கமரா ஆகியவை மஹவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
வழக்கு விசாரணை எதிர்கால திகதியொன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யானைகள் வீதியைக் கடக்கும் நேரங்களில், கசிகோட்ட யானை சுரங்கப்பாதை (Underpass) அருகே யானைகளைப் பார்ப்பதற்கும், இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் பெருந்திரளான மக்கள் கூடுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் யானைகள் மக்களைத் துரத்தக்கூடும் என்பதால், உயிர் ஆபத்து ஏற்படக்கூடிய அபாயம் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அனுமதியின்றி ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்தும் நபர்களைக் கைது செய்ய வனஜீவராசிகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதுடன், அத்தகைய நபர்கள் ட்ரோன் கமராக்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.