காஸாவில் மனிதாபிமானத் தேவைகள் அதிகரிப்பு!
காஸா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் பாலஸ்தீன மக்களுக்குத் தொடர்ந்தும் ஆபத்தை விளைவிப்பதுடன், அங்குள்ள மனிதநேயத் தேவைகளையும் கணிசமாக அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம் (OCuA) வெளியிட்டுள்ள அண்மைக்கால அறிக்கையில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேலிய படைகளின் துப்பாக்கிச் சூடு, பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் கடற்படைத் தாக்குதல்கள் காரணமாகப் பல பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக,ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், சர்வதேச மனிதநேயச் சட்டங்களின் கீழ் பொதுமக்களும், பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளும் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அந்த அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
போர் ஆரம்பித்ததில் இருந்து காஸா பகுதியில் வெடிக்கும் அபாயமுள்ள 1,000 க்கும் மேற்பட்ட வெடிபொருட்களை, ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றும் அமைப்புக்கள் அடையாளப்படுத்தியுள்ளன.
அத்துடன், இந்த மாதத்தில் மட்டும் 63,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு விழிப்புணர்வு அமர்வுகளையும் குறித்த அமைப்புக்கள் நடத்தியுள்ளன.