வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; நால்வர் உயிரிழப்பு.!
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் மற்றும் புகையிரத விபத்தொன்றில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போலவத்தை மற்றும் பொரலெஸ்ஸ புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட புகையிரதக் கடவையில், கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் லுனுவில பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஆவார்.
இவ்விபத்தில் காயமடைந்து மாறவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
தங்கொடுவை – சுமகி சந்தை மற்றும் மெடிகொடுவை வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அதன் சாரதி பலத்த காயமடைந்து மாறவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், நிகவெரட்டிய – குருநாகல் வீதியின் மாகல்லேகம பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வலதுபுறமாகத் திரும்ப முற்பட்ட வேளையில், எதிர்வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்து படுகாயமடைந்த 52 வயதுடைய பெண் நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வீதியின் 46 ஆம் கட்டை மைல்கல் பகுதிக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் பயணித்த இளைஞர் இருவரும் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னால் பயணித்த இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சிவனகர் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஆவார்.
மேலும், குறித்த வீதி விபத்துக்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.