உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
12 ஞாயிறு

கருத்து, பேச்சு சுதந்திரத்துக்கு அரசாங்கம் ஆப்பு.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
19 பார்வைகள்

இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தைப் போலவே பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

ஜனநாயக நாடொன்றில் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை என மூன்று முக்கிய தூண்கள் காணப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக சுதந்திர ஊடகமும் மற்றுமொரு தூணாக விளங்குவதால், அது அரசமைப்பில் குறிப்பிடப்படாவிட்டாலும் அதனைப் பாதுகாக்க வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கி பேச்சுச் சுதந்திரத்தை இல்லாதொழித்துள்ளது. நிகழ்நிலை காப்புச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றை நீக்குவோம் என்று இவர்கள் ஏலவே கூறினாலும், அவை இன்னும் நடைமுறையில் இருக்கின்றமையோடு, தற்போது நாடாளுமன்றத்தில் பேசும் சுதந்திரம் கூட மீறப்பட்டு வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமை செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள டி.எஸ். சேனநாயக்க அரசியல் பீடத்தில் இன்று நடைபெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதஸ இவ்வாறு தெரிவித்தார்.

இன்று விவசாயிகள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகள் குறித்து பேசுவதற்குக் கூட சுதந்திரம் இல்லை. தேர்தல் காலத்தில் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நெல்லுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலை தருவோம் என பிரஸ்தாபித்தனர். இன்று அது 120 ரூபாவிற்கும் குறைந்த மட்டத்திற்கு வந்துள்ளது. ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபாய் செலவாவதாக விவசாய அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், விவசாயிகளின் தோள்களில் ஏறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் இன்று விவசாயிக்கு 17 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

விவசாயிகளின் பிரச்சினைகளை நாடாளுமன்றில் பேச முடியாத நிலை.
உண்மையை விட அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதே நோக்கமாகக் கொண்டு, விவசாயிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், இன்று நாடாளுமன்றத்தில் விவசாயிகளின் துயரத்தைக் கூறுவதற்கு எதிர்க்கட்சிக்கு காணப்படும் உரிமையை மறுத்து வருகின்றது. இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கத்தின் பாதையிலேயே பயணித்து, 2023 ஆம் ஆண்டைப் போலவே இன்றும் நாடாளுமன்றக் குழுக்களில் பேசுவதற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கும் தடை விதித்துள்ளது. இந்த அரசாங்கத்திற்கும் கடந்த அரசாங்கத்திற்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை.

விதை, உரம், விவசாய இரசாயனப் பிரச்சினைகள் மற்றும் மனித – யானை மோதல் போன்ற விடயங்கள் குறித்துப் பேசுவதற்கு உரிமை இல்லாத நிலை இன்று எழுந்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுத் தங்களை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கோ அல்லது அது குறித்துப் பேசுவதற்கோ உள்ள உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்திற்கும் கடந்த அரசாங்கத்திற்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாமல் போனதே இதற்குக் காரணமாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் சலுகைகள் பெரும் கோடீஸ்வரர்களுக்கே
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 52 வீதம் பங்களிப்பை நல்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோரின் சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பான ‘பராட்டே சட்டத்தை’ தேர்தல் இலக்குகளுக்காக மட்டுமே இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கமும் தற்காலிகமாக இரத்து செய்து வந்தன. இதனால் அவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படவில்லை. இந்த தொழில்முனைவோருக்கு கட்டுபடியாகக்கூடிய செலவில் மூலதனத்திற்கான அணுகலை பெற்றுக் கொடுக்க வேண்டும். என்றாலும் அது வழங்கப்படவில்லை. இந்த அரசாங்கமும் இதை வழங்கவில்லை. இந்த வசதிகளும் சலுகைகளும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு கிடைக்காமல் பெரும் கோடீஸ்வரர்களுக்கே கிடைக்கின்றன. நடுத்தர வர்க்கத்தினருக்கும், கிராமப்புற மக்களுக்கும், தோட்டத் தொழிலாளர்களுக்கும் இந்த சலுகைகள் கிடைத்தபாடில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

சர்வாதிகார ஆட்சியை நோக்கி அரசாங்கம் நகர முயற்சிக்கிறது.
இந்த அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகின்றது. இவர்கள் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை, சுதந்திர ஊடகம் மட்டுமன்றி சிவில் சமூகத்தையும் அழித்து, ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர முயற்சிக்கின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒரு நிலைமை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நீதித்துறை சுதந்திரத்திற்காக நாங்கள் போராடுவோம்.
தற்போது உயர் நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பாமல், நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது நீதித்துறைக்கு விடுக்கப்படும் பெரும் அழுத்தமாகும். இதற்கு எதிராக எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து போராடும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சரியான பாதையிலேயே நாம் பயணிக்கிறோம்.
ஐக்கிய மக்கள் சக்தியிடம் சில குறைபாடுகள் காணப்பட்டாலும், நாம் சரியான பாதையிலேயே பயணிக்கிறோம். நாட்டை கட்டியெழுப்பும் சரியான பாதை ஐக்கிய மக்கள் சக்தியிடமே காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இங்கு மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; அமைச்சரின் பொறுப்பற்ற தன்மையே உயிரிழப்புக்கு காரணம்.!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளுக்குப் பொறுப்பான அமைச்சர் சரியான நேரத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதே காரணம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின்…

31 0 0
இலங்கை செய்திகள்

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

நாட்டில் டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த வருடத்தில் இதுவரை நாடு முழுவதும் மொத்தம்…

24 0 0
இலங்கை செய்திகள்

திருமலையில் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திருகோணமலை மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக்…

17 0 0
இலங்கை செய்திகள்

ஜெசாக் நிறுவன ஒழுங்குபடுத்தலில் பெண் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு பயிற்சி.!

ஜெசாக் நிறுவன ஒழுங்குபடுத்தலில் யாழ். மாவட்டத்தின் 30 இற்கும் மேற்பட்ட பெண் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கான AI தொழில்நுட்ப அறிவூட்டல் மற்றும் வலுவூட்டல் விழிப்புணர்வு பயிற்சியானது ஜெசாக் நிறுவனத்தில்…

26 0 0