தந்தையுடன் பாண் வாங்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.!
மாத்தறை மாவட்டம், பஸ்கொடை பிரதேசத்தில் உள்ள வீதியால் தந்தையுடன் நடந்து சென்ற 9 வயதுச் சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இந்தக் கோர விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தந்தையும் குறித்த சிறுவனும் பாண் வாங்குவதற்காக வீதியோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த போது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதி இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவரோடு நடந்து சென்ற 38 வயதுடைய தந்தை அதிர்ஷ்டவசமாகச் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
அதேவேளை, விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த 23 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் பஸ்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.