உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

உலக சுகாதார அமைப்பின் சர்வதேச ஒத்துழைப்பு மையமாக
அங்கொடை தொற்று நோய்கள் நிறுவனம் தெரிவு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
32 பார்வைகள்

இலங்கையின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு சர்வதேச அளவில் பெற்றுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்குச் சான்றாக, அங்கொடையில் அமைந்துள்ள தேசிய தொற்று நோய்கள் நிறுவனம், டெங்கு நோயாளிகள் சம்பந்தமான பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான உலக சுகாதார அமைப்பின் ஒத்துழைப்பு மையமாக உத்தியோகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மருத்துவமனை வரலாற்றில் உலக சுகாதார அமைப்பின் இத்தகைய உயரிய சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட முதலாவது மருத்துவமனையாக அங்கொடை தொற்று நோய்கள் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனத்தை முன்னிட்டு, தேசிய தொற்று நோய்கள் நிறுவன வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட கௌரவிப்பு விழாவும் புதிய நினைவுப் பலகைத் திறப்பு விழாவும் நடைபெற்றன. இந்நிகழ்விற்குச் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமை தாங்கியதோடு, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்கா குணசேகரவும் இதில் விசேட விருந்தினராகப் பங்கேற்றார்.

அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ புதிய நினைவுப் பலகையைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:-

“நாட்டின் சுகாதாரத் துறையில் இந்த நிகழ்வை ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விசேட மைல்கல்லாகக் கருதலாம். பல ஆண்டுகளாக எமது மருத்துவ நிபுணர்கள், தாதியர்கள், ஆய்வக வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் வழங்கி வரும் தரமான மருத்துவச் சேவை மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்குக் கிடைத்த கௌரவமே இந்த சர்வதேச அங்கீகாரமாகும்.

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் 2030 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி வரையான நான்கு ஆண்டு காலப் பகுதிக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் உத்தியோகபூர்வ ஒத்துழைப்பு மையமாக இந்த நிறுவனம் செயல்படவுள்ளது. பல வருடங்களுக்கு முன்னர் இங்கு ஆரம்பிக்கப்பட்ட முறையான டெங்கு பயிற்சித் திட்டங்கள், இன்று நாடளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காக்கும் திறமையான மருத்துவப் பணியாளர்களை உருவாக்குவதற்கான அடித்தளமாக மாறியுள்ளன.” – என்றார்.

இதுவரை காலமும் இலங்கையின் சுகாதாரப் பணியாளர்கள் டெங்கு மற்றும் தொற்றுநோயியல் சார்ந்த உயர்கல்வி மற்றும் பயிற்சிகளைப் பெறுவதற்காகப் பெருமளவிலான நிதியைச் செலவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று வந்தனர். ஆனால், தற்போதைய இந்த சர்வதேச அங்கீகாரத்தின் மூலம், பிற நாடுகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து டெங்கு தொடர்பான கோட்பாட்டு மற்றும் மருத்துவ அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான வரலாற்று வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஏற்கனவே இந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமானது பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் போன்ற அண்டை நாடுகளின் மருத்துவக் குழுக்களுக்கு டெங்கு நோய் குறித்த விசேட மருத்துவ வழிகாட்டல்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த மையம் எட்ட வேண்டிய முக்கிய இலக்குகளையும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க, உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான முகமைப் பிரதானி வைத்தியர் மொமோ டகேச்சி, தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தின் முன்னாள் மூத்த உடலியல் நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம, அமைச்சின் மேலதிக செயலாளர் கே.பி. யெகச்சந்திரா, பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ். எம். அர்னால்ட், டாக்டர் பிரதீப் விஜேசிங்க, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் கபில கண்ணங்கர உட்பட மருத்துவமனையின் பணிப்பாளர் மற்றும் சுகாதார வல்லுநர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

64 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

84 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0