உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அமெரிக்கா நன்கொடையாக வழங்கிய உலங்கு வானூர்திகள் விமானப்படையில் இணைப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
42 பார்வைகள்

இலங்கை விமானப்படையின் விமானிகள் பயிற்சித் திறனை மேம்படுத்துவதற்கும், வான்படைச் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் ஏதுவாக அமெரிக்க அரசால் நன்கொடையாக வழங்கப்பட்ட ரி.எச். 57 ‘சீ ரேஞ்சர்’ ரக 10 பல்பயன்பாட்டு உலங்கு வானூர்திகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இரத்மலானை விமானப்படை தளத்தில் நடைபெற்றது.

இரத்மலானை விமானப்படை தளத்துக்கு வருகை தந்த முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கு, விமானப்படையினரின் விசேட அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, புதிதாக இணைக்கப்பட்ட உலங்கு வானூர்திகளை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி, விமானப்படைப் பணியாளர்களுடன் குழுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

இந்த உத்தியோகபூர்வ பொறுப்பேற்பை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையே விசேட பாதுகாப்பு ஒப்பந்தமொன்றும் கையெழுத்திடப்பட்டது. இதில் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் அமெரிக்க பசிபிக் விமானப்படை தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் ஆகியோர் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திட்டனர்.

தற்போது அமுலுக்கு வரும் வகையில் இணைக்கப்பட்டுள்ள இந்த ரி.எச். 57 ‘சீ ரேஞ்சர்’ உலங்கு வானூர்திகள் கொண்டுள்ள பல்பயன்பாட்டுத் திறன்களின் காரணமாக, எதிர்காலத்தில் பல முக்கிய பாதுகாப்பு மற்றும் சிவில் துறைகளின் ஊடாக இவற்றைச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்த வான்படைத் தலைமையகம் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, இந்தப் புதிய ரி.எச். 57 விமானப் படைப்பிரிவின் மூலம் அனர்த்த நிவாரணச் சேவைகள், அவசரத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், அவசர பொதுமக்கள் சேவை நடவடிக்கைகள் என்பவற்றுக்கு பாரிய பலன் கிடைக்கவுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை நடவடிக்கைகளுக்கான இலங்கை விமானப் பணியாளர்களுக்கு சர்வதேசத் தரத்திலான பயிற்சிகளை வழங்குவதற்கும் இந்தக் உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்படவுள்ளன. இது உலகளாவிய அமைதிக்காக இலங்கை வழங்கும் பங்களிப்பை மேலும் வலுப்படுத்த வழிவகுக்கும் எனப் பாதுகாப்புத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து விசேட சரக்கு போக்குவரத்து வசதிகள் மூலம் கடந்த ஜூன் முதலாம் திகதி இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட இந்த உலங்கு வானூர்திகள், இரத்மலானை விமானப்படை தளத்தில் உள்ள வான்பொறியியல் பிரிவில் ஒன்று சேர்க்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இலங்கையின் வான்வெளி மற்றும் காலநிலைக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து தொழில்நுட்ப சோதனைகள் மற்றும் பரீட்சார்த்தப் பறப்பு நடவடிக்கைகள் தற்சமயம் முழுமையாக நிறைவடைந்துள்ள பின்னணியிலேயே, இவை உத்தியோகபூர்வ செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா, மார்ஷல் ஒஃப் த எயார் ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க ஆகியோருடன் விமானப்படை பணிப்பாளர் சபையின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0