உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு இழக்க நேரிடும் – ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
36 பார்வைகள்

இலங்கையில் தற்போது அரங்கேறி வரும் தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணமாக ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு இழக்கும் பாரிய பொருளாதார அபாயம் ஏற்பட்டுள்ளது என்று கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் எச்சரித்துள்ளார்.

கொழும்பு 3, மலர் வீதியிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மக்களுக்கான கூட்டு எதிர்க்கட்சியின் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான அஜித் மன்னப்பெரும மற்றும் லசந்த அழகியவண்ண உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த ஊடக சந்திப்பில் பேராசிரியர் பீரிஸ் மேலும் தெரிவிக்கையில்,

“நாம் அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் கொழும்பு அலுவலக அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினோம். நாட்டின் மக்கள் எதிர்நோக்கும் கடுமையான பொருளாதாரச் சுமையைக் கருத்திற்கொண்டு, எரிபொருளுக்கான மானியங்களைக் குறைக்கவோ அல்லது முழுமையாக நிறுத்தவோ அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டாம் என அங்கு உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்தோம்.

இந்தச் சந்திப்பு முடிந்து நாம் வெளியேறிய போது ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்தது. அரசியல் கட்சித் தலைவரான சுகீஸ்வர பண்டார, ஏதோ பாதாள உலகக் குழுவினரை ஒடுக்கும் பாணியில், வீதியை மறித்து வாகனத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுக்கப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் வாகனத்தில் இருந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் பினோய் ஹெட்டியாராச்சியும் எவ்வித குற்றச்சாட்டுகளுமின்றி ஐந்து மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் இதுவொரு கடுமையான குற்றவியல் குற்றம் என்பதால், இந்த அநீதியான கைதுக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாம் செய்து வருகின்றோம். தற்போதைய ஆட்சி ஒரு பொலிஸ் இராஜ்யத்தை நோக்கிய சர்வாதிகாரப் பயணமாகவே அமைந்துள்ளது.

அடுத்த வருட மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் நிறைவடையவுள்ள நிலையில், நாடு தற்போது கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது. கடந்த மே மாதத்தில் மட்டும் சுற்றுலாத்துறை வருமானம் ஐந்து சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வெளிநாட்டுப் பணியாளர்களின் டொலர் வருமானமும் பெருமளவில் குறைந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எவ்வித சுங்கவரியுமின்றி ஆடை, தேயிலை, மசாலாப் பொருள்கள் உள்ளிட்ட ஏற்றுமதிகளை மேற்கொள்வதற்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையே இலங்கையின் பொருளாதாரத்துக்குத் தற்போதைய ஒரே தீர்வாக உள்ளது.

அடுத்த வருடம் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைக்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதற்காகச் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உள்ளிட்ட 27 சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இலங்கை அரசு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது முதன்மை நிபந்தனையாகும். தற்போதுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு முரணானது என ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர்.

ஆறு மாதங்களுக்கு முன்பு தற்போதைய நீதி அமைச்சர் கொண்டுவந்த புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், பழைய சட்டத்தை விடவும் மோசமானது எனச் சிவில் அமைப்புகளாலும் சட்டத்தரணிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதால், அதனை நிறைவேற்ற முடியாது என்பதை அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போது மீண்டும் ஒரு புதிய சட்டமூலத்தை அடுத்த இரு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப் போவதாக நீதி அமைச்சர் கிளிநொச்சியில் வைத்து தெரிவித்துள்ள போதிலும், அதன் உள்ளடக்கம் என்னவென்று யாருக்கும் தெரியாது. சமூகத்துடன் முறையான கலந்துரையாடல் இன்றி தன்னிச்சையாக உருவாக்கப்படும் இத்தகைய சட்டங்களால் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை இல்லாது போகும் அபாயம் உள்ளது. அவ்வாறு நடந்தால் இலங்கை பொருளாதாரத்தால் அந்தப் பாரிய பாதிப்பைத் தாங்க முடியாது.

இலங்கை அரசமைப்பின் படியும் சர்வதேச சட்டங்களின் படியும் சித்திரவதைகளுக்கு உள்ளாகாமல் வாழ்வது அனைவரதும் அடிப்படை உரிமையாகும். பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கும் இந்தப் பாதுகாப்பு பொருந்தும்.

இலங்கையில் சித்திரவதைகளின் நிலைமை குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் துணைக் குழுவொன்று தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளது. இத்தகைய தருணத்தில் சர்வதேச விதிகளை இலங்கை மீறினால் அதன் விளைவுகள் மிக ஆபத்தானதாக அமையும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0