கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது!
களுத்துறை வடக்கு பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் வைத்து 10 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்ற பொலிஸ் பரிசோதகர் ஒருவர், கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த (SCIB) பொலிஸ் பரிசோதகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வாகனப் புலனாய்வு விசாரணை ஒன்றில் குற்றவியல் குற்றச்சாட்டுகள் இன்றி சாதாரண முறையில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து, வாகனத்தை விடுவிப்பதற்காக ஒருவரிடமிருந்து இவர் 11 இலட்சம் ரூபாயை கையூட்டலாக கோரியுள்ளார்.
இதில் முதற்கட்டமாக கடந்த மே 30ஆம் திகதி ஒரு இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்ட நிலையில், நேற்று இரவு எஞ்சிய 10 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்ட போது கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளார்