உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மக்களின் பணத்தை சுரண்டுகின்றது அரசு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
27 பார்வைகள்

நாட்டில் பணவீக்கம், வாழ்க்கைச் செலவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசால் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்க முடியாமல் போயுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“அரசு மக்கள் மீது பாரிய வரிச்சுமையை சுமத்தி அவர்களைப் பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளமையால் மக்களின் வாங்கும் சக்தி படிப்படியாகக் குறைந்து வருகின்றது. நல்லாட்சி அரசின் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்தை, தற்போதைய அரசு மக்களின் பணத்தைச் சுரண்டும் ஒரு சூத்திரமாக மாற்றியமைத்துள்ளது. மத்திய கிழக்கு யுத்தத்தைக் காரணம் காட்டி, எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கான புதிய சுரண்டல் முறையொன்றை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 75 முதல் 80 டொலர்கள் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் பலனை மக்களுக்கு வழங்கி, உள்நாட்டிலும் எரிபொருள் விலையைக் குறைப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், விலையைக் குறைக்க முடியாது என்றே அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

மத்திய கிழக்கு யுத்தம் பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பித்த போது இலங்கையிடம் மூன்று மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளது என்று ஜனாதிபதி மார்ச் மாதத்தில் அறிவித்திருந்தார். அவ்வாறாயின், புதிய எண்ணெய் கப்பல்கள் எதனையும் இறக்குமதி செய்யாமல், பெப்ரவரி மாதத்தில் 67 டொலர்களுக்கு வாங்கிய பழைய இருப்புக்கே மார்ச் மாதத்தில் மட்டும் அரசாங்கம் நான்கு முறை எரிபொருள் விலையை அதிகரித்தது. ஆனால், தற்போது உலக சந்தையில் விலை குறைந்துள்ள போது, அதிக விலைக்கு வாங்கியதாகக் கூறி விலையைக் குறைக்க மறுக்கின்றது.

பெப்ரவரி 28 இற்குப் பின்னர், 92 ஒக்டேன் பெற்றோல் 142 ரூபாவினாலும், 95 ஒக்டேன் பெற்றோல் 155 ரூபாவினாலும், ஒட்டோ டீசல் 126 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 146 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் 103 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்டை நாடான பாகிஸ்தானில் பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் வரிக்குறைப்பு மூலம் நிவாரணம் வழங்கப்படுகின்றது. ஆனால், இலங்கையில் அதிக வரி வசூலிக்கப்படுகின்றது. தேர்தலுக்கு முன்பு எரிபொருள் மீதான வரிகள் நீக்கப்படும் என்றும், கமிஷன் பெறப்படுவதாகவும் கூறினார்கள். அப்படியாயின் இப்போது அந்தப் பணம் யாருடைய பாக்கெட்டுக்குச் செல்கிறது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

அதேபோல், மாகாண சபை தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ‘டித்வா’ திட்டத்துக்காகச் செலவிடப்பட்டது என்று ரில்வின் சில்வா கூறிய கருத்து தனக்குத் தெரியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார். நாட்டின் அனைத்து ஊடகங்களிலும் வெளியான இந்தச் செய்தியை பிரதமர் பார்க்கவில்லை என்பதை ஏற்க முடியாது. ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் பேசப் பயந்தே அவர் அவ்வாறு கூறுகின்றார். தனது பிரதமர் பதவி பறிபோய்விடும் என்ற பயத்திலேயே பிரதமர் வாழ்கின்றார்.

மத்திய வங்கியின் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் காணாமல் போன சம்பவத்துக்கு அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். டிஜிட்டல் பொருளாதார ஆலோசகர்கள் இருக்கும் போதே இந்த மோசடி நடந்துள்ளது. இதற்கு நிதியமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியைக் கண்டறிய நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியே பாரிய போராட்டத்தை நடத்தியது. ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு நடந்த அநீதி குறித்து சஜித் பிரேமதாஸவே பேசினார். அநுரகுமார திஸாநாயக்க இது குறித்து அன்று பேசவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியவுடன் இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக தராதரமின்றி சட்டம் நிலைநாட்டப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

64 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

85 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0