அமெரிக்க பசுபிக் விமானப் படை தளபதி இலங்கைக்கு விஜயம்!
அமெரிக்க பசுபிக் விமானப் படைகளின் கட்டளைத் தளபதியான ஜெனரல் கெவின் ஷ்னைடர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் இலங்கை வந்துள்ள அவர், எதிர்வரும் 24ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, பிராந்தியம் முழுவதும் ஸ்திரத்தன்மையை பேணல் மற்றும் குற்றச்செயல்களைத் தடுத்தல் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதற்காக, இரு நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட பாதுகாப்பு முன்னுரிமைகள், பாதுகாப்புத் துறையில் ஒருவரோடொருவர் தொடர்புகொண்டு இயங்கும் திறனை பலப்படுத்துதல் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்படவுள்ளன.
இந்த நோக்கங்களுக்காக, ஜெனரல் கெவின் ஷ்னைடர் இலங்கையின் சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ பிரதானிகளை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.