உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

செம்மணிப் புதைகுழி விசாரணைக்கு
சர்வதேச நிபுணத்துவம் மிக அவசியம்

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
31 பார்வைகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், உண்மைகளைக் கண்டறிவதற்கும் சர்வதேச தடயவியல் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் அவசியம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சாணக்கியன் எம்.பி., நோர்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

அவரது ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக, நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் அமைந்துள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிவின் துணை இயக்குநர் பியேட் கப்ரியல்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்

இலங்கையின் சமீபத்திய அரசியல் நிலவரங்கள், மனித உரிமை முன்னேற்றங்கள் மற்றும் தமிழ்ச் சமூகத்தைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய கூட்டுப் புதைகுழியாகக் கருதப்படும் செம்மணியில், இதுவரை 380 இற்கும்  மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன என்று சாணக்கியன் எம்.பி., அதிகாரிகளுக்கு விளக்கினார். எனினும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும் அவர் கவலை வெளியிட்டார்.

இவ்வளவு பெரிய அளவிலான அடையாளப் பணிகளை முழுமையாக முன்னெடுப்பதற்கு இலங்கையிடம் தற்போது போதிய தடயவியல் மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச தரத்துக்கு ஏற்ப, நம்பகமான விசாரணையை உறுதி செய்ய அரசு சர்வதேச உதவியை நாட வேண்டும் என்றும், ஆனால் அதற்கான எந்தவொரு தெளிவான அறிகுறியும் தற்போதைய அரசிடம் தென்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 1998 ஆம் ஆண்டு செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் இன்னமும் ஸ்கொட்லாந்தில் பாதுகாப்பாக உள்ளதை நினைவூட்டிய அவர், இலங்கை அரசு விரும்பினால் உடனடியாக சர்வதேச ஒத்துழைப்புடன் டி.என்.ஏ. பரிசோதனைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குப் பதிலளிக்க இதுவே சரியான வழி என்றும் வலியுறுத்தினார்.

நோர்வே அரசின் இராஜாங்கச் செயலாளர் ஆண்ட்ரியாஸ் மோட்ஸ்ஃபெல்ட் கிராவிக்குடனான முந்தைய சந்திப்புகளின் தொடர்ச்சியாக அமைந்த இந்தக் கலந்துரையாடலில், பின்வரும் முக்கிய அம்சங்கள் குறித்து பேசப்பட்டன.

* மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் நிலவும் தொடர்ச்சியான தாமதம் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வின் அவசியம்.

* பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாடு, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், காணி உரிமைகள் மற்றும் கட்டாயக் காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் விவகாரம்.

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் கொழும்பில் நோர்வேத் தூதுவருடன் கலந்துரையாடப்பட்டு, வடக்கு மற்றும் கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து, சம்பந்தப்பட்ட இலங்கை அமைச்சு இதுவரை எந்தவித உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்காமை குறித்து இதன்போது அதிருப்தியும் வெளியிடப்பட்டது.

இந்த ஒஸ்லோ சந்திப்புடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஐரோப்பிய பயணம் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்தப் பயணத்தின் போது அவர் ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே வெளிவிவகார அமைச்சு மற்றும் பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார்.

குறிப்பாக, ‘டெமோ பின்லாந்து’ (Demo Finland), ‘டெமோக்ரசி இன்டர்நேஷனல்’ போன்ற பல்கட்சி ஜனநாயக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து அரசியல் கட்சி அபிவிருத்தி, ஜனநாயக பங்கேற்பு, இளைஞர் ஈடுபாடு மற்றும் நிறுவனத் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் எதிர்கால ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்தும் அவர் விரிவாக ஆராய்ந்துள்ளார்.

இந்தப் பயணமானது சர்வதேச சமூகத்துக்கும் தமிழ் மக்களுக்குமான உறவை வலுப்படுத்துவதோடு, தமிழர் தாயகத்தின் தற்போதைய சவால்களை உலக அரங்குக்குக் கொண்டு செல்ல ஏதுவாக அமைந்தது என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0