தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.!
மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்துகளில் முறையாக பயணச்சீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் புகார் தெரிவித்தனர்.
குறிப்பாக அரசாங்கம் டீசல் விலையை உயர்த்தும் போது பல பகுதிகளில் சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் இருந்து அதிக அளவு கட்டணம் அறவிடப்படுவதாகவும் பயணிகளுக்கு முறையாக எஞ்சிய பணம் வழங்கப்படுவதில்லை எனவும் பயணிகள் புகார் தெரிவித்தனர்.
நுவரெலியா மாவட்டத்தில் குறுந்தூர நெடுந்தூரம் சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்துகளில் இவ்வாறான செயல் இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக நகர் பகுதியில் இருந்து கிராம தோட்ட பகுதியில் சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்துகளில் இவ்வாறான செயல் இடம்பெற்று வருகின்றது. அத்துடன் பேருந்துகளில் நடத்துனராக பணியில் ஈடுபட்டு வரும் ஒரு சில பேருந்துகளில் முறையான நடத்துனர்கள் சேவையில் அமர்த்தப்படுவதில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து அமைச்சர் மற்றும் மத்திய மாகாண தனியார் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயணிகளிடம் அதிக அளவில் கட்டணம் அறவிடப்படுவதை தவிர்க்க கட்டாயம் பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு பயணச்சீட்டு வழங்காமல் சேவையில் ஈடுபட்டு வரும் அனைத்து தனியார் பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.