சற்றுமுன் விமல் வீரவன்ச கைது.!
மே 18 பத்தரமுல்ல தேசிய போர் நினைவுத்தூபி வளாகத்தில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் வாக்குமூலமளிக்க விமல் வீரவன்ச இன்று (25) திங்கட்கிழமை காலை தலங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவொன்றில், விசேட பொலிஸ் குழுவொன்றினால் தாம் கைது செய்யப்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நேற்று பொலிஸில் ஆஜராகாத நிலையில், இன்று தலங்கம பொலிஸில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் முன்னதாக தெரிவித்திருந்தனர்.
கடந்த மே 18ஆம் திகதி, தேசிய போர் வெற்றித் தின நிகழ்வுக்கான ஒத்திகைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவொன்று தேசிய போர் நினைவுத்தூபி வளாகத்திற்குள் நுழைய முயன்றது. இதனால் பொலிஸாருக்கும் அந்தக் குழுவினருக்கும் இடையே பதற்றநிலை ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தையடுத்து, ஒத்திகை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன் அங்கு கடமையில் இருந்த அதிகாரிகளின் பணிகளில் தலையிட்டதாகக் கூறி, விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.