வரவுபிலவுக் குளத்தை விடுவித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து.!
தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட வரவுபிலவுக் குளத்தினை விடுவிப்புச் செய்வதுடன், குறித்த குளத்தினைச் சீரமைப்புச் செய்து விவசாயிகளிடம் கையளிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலுக்கமைவாக, ஆக்கிரமிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையிலுள்ள குறித்த வரவுபிலவு குளத்தினை ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையம் எல்லைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையப் பிரிவில் பெரிய இத்திமடு கமக்கார அமைப்பின் கீழுள்ள வரவுபிலவுக் குளத்தினைக் காணவில்லை. குறித்த குளத்தின் 20 ஏக்கர் வரையான நீரேந்துப் பகுதியை தனிநபர் ஒருவர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து நெற்பயிர்ச்செய்கை மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் இதுதொடர்பில் வரவுபிலவு குளத்தின் கீழ் நெற்செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளின் முறைப்பாட்டிற்கு அமைவாக அண்மையில் குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலமைகள் தொடர்பில் பார்வையிட்டிருந்தேன்.
குறிப்பாக வரவுபிலவுக் குளத்தின் கீழ் 68 ஏக்கரில் 15 பயனாளிகள் நெற்செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த குளத்தின் நீரேந்துப்பகுதி 20 ஏக்கர் வரையில் தற்போது தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அக்குளம் சீரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
இவ்வாறாக குறித்த குளம் சீரமைக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளமையால் அக்குளத்தின் கீழ் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளால் மானாவாரியாக பெரும்போக நெற்செய்கையினை மாத்திரமே மேற்கொண்டு வருகின்றனர்.
தனிநபரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குளத்தினை விடுவிப்புச் செய்து, சீரமைக்கப்பட்டால் அப்பகுதி விவசாயிகளால் சிறுபோக நெற்செய்கையும் மேற்கொள்ள முடியும்.
அந்தக்குளம் சீரமைக்கப்படாமல் கைவிடப்பட்டிருப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது.
எனவே குறித்த குளத்தினை உடனடியாக விடுவிப்புச் செய்வதுடன், சீரமைத்து விவசாயிகளிடம் கையளிப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதன்போது ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலைய அபிவிருத்த உத்தியோதத்தர் இராஜரத்தினம் சுகந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,
குறித்த வரவுபிலவுக் குளம் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் இந்தகுளம் தொடர்பான நிலஅளவைத் திணைக்களத்தின் ஆய்வறிக்கையில் அந்தப்பகுதியில் குளங்கள் எவையும் இல்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்தக் குளத்திற்கான நில அளவைத் திணைக்கள வரைபடம் இல்லாத நிலையில், அந்தக் குளத்தின் நீரேந்துப் பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள அந்த தனிநபருக்கு எதிராக தம்மால் வழக்குத் தொடரமுடியாத நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அந்தப் பகுதியை அரச காணி எனத் தெரிவித்து, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரால் குறித்த தனிநபருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருக்கின்றது.
ஆனால் அந்தப்பகுதி வரபுபிலவுக் குளத்தின் நீரேந்துப் பகுதியாகும். எனினும் அந்தப் பகுதியில் குளம் இருந்தது என்பதை நாம் கோருவதற்கு எமக்கு நில அளவை வரைபடம் தேவைப்படுகின்றது எனத் தெரிவித்தார்.
இதன்போது நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர் கருத்துத் தெரிவிக்கையில்,
அந்தப் பகுதிக்குரிய நில அளவைத் திணைக்களத்தின் அளவீட்டு வரைபடங்கள் எவையும் இல்லை. அந்தப்பகுதி வனவளத் திணைக்களத்திற்கு உட்பட்ட பகுதியாக இருக்கின்றது எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் தரவுகளின்படி வரவுபிலவுக்குளம் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்ததுடன், மாவட்ட செயலகத்தினுடைய குறித்த தரவையும் சபையில் காண்பித்தார்.
அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் தரவுகள் பொய்யா எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.
அதேவேளை அந்தக் குளத்தின் கீழ் விவசாயிகள் தற்போது மானாவாரியாக நெற்செய்கையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அதுதவிர அப்பகுதியில் குளம் இருந்தது என்பதற்குச் சான்றாக உடைவடைந்த நிலையிலான குளக்கட்டுப் பகுதிகள் அங்கு தற்போதும் காணப்படுகின்றன.
இவ்வாறிருக்கும்போது எவ்வாறு நில அளவைத் திணைக்களத்திடம் குளத்திற்குரிய வரைபடம் இல்லாமல் போகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது கேள்வி எழுப்பினார்.
அத்தோடு கடந்தகாலங்களில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் குளங்களை மூடி இராணுவ முகாம்கள் அமைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அதையொத்த செயற்பாடுகளை அரச திணைக்களங்கள் மேற்கொள்ளக் கூடாதெனவும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இதன்போது கருத்துத் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் குளத்தை சீரமைத்து விவசாயிகளிடம் கையளிக்குமாறே கோருகின்றார்.
எனவே கமநல சேவைத் திணைக்களம் குளத்தை எல்லைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளரால் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் குளத்தினை எல்லைப்படுத்துவதற்கான செயற்பாட்டை தாம் முன்னெடுப்பதாக இதன்போது ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
மேலும் அவ்வாறு கமநல சேவைத் திணைக்களம் குளத்தை எல்லைப்படுத்தித் தந்தால் தம்மால் நில அளவீடு செய்வதற்கான செயற்பாடு முன்னெடுக்கப்படுமென நில அளவைத் திணைக்களத்தாலும் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

