சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 77 பேர் கைது.!
இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து ஏப்ரல் 17ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை உள்ளூர் நீர்ப்பரப்புகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டன.
இதன்போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 77 நபர்கள், வணிக வெடிபொருட்களுடன் கூடிய 17 டிங்கிகள் மற்றும் 06 டிராக்டர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, திருகோணமலை, கந்தளாய், வாழைச்சேனை, கல்லராவ, கிண்ணியா, துடுவ, காயங்கேணி, போல்ட் பொயின்ட், சாம்பூர், சிலாவத்தை, இறக்கக்கண்டி, முகத்துவாரம், பனிச்சங்கேணி, நந்திக்கடல் களப்பு, யாழ்ப்பாணம், வெற்றிலைக்கேணி, பருத்தித்துறை, மன்னார் சவாரிபுரம் ஆகிய கரையோரங்களையும் கடற்பரப்புகளையும் உள்ளடக்கியதாக கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படைக் கட்டளைகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 77 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கடல் அட்டைகள், வணிக வெடிபொருட்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், டிராக்டர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோகிலாய், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வாழைச்சேனை, குச்சவெளி, சிலாவத்துறை மற்றும் கிண்ணியாவில் உள்ள மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்கள அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டன.




